ராஜாக்களும்,  மந்திரிகளும்

வயதான குரு  ஒருவர்  இருந்தார்.  எத்தனையோ ராஜாக்களும்,  மந்திரிகளும்  அவரிடம் பயிற்சி பெற்றிருந்தாலும் அவர் பெரிய அளவில் ஆஸ்தி எதுவும் சேர்த்து வைத்துவிடவில்லை. அவருக்கு ஒரே ஒரு மகன்.  தன்  ஒரே மகனுக்காகத் தான்  எதையுமே  சேர்த்து வைக்கவில்லை என்ற கவலை  அவரது  இறுதி நாட்களில்  அவர் மனதை வேதனைப்  படுத்தியது.  ஒரு முடிவுக்கு வந்தார்.  அண்டை நாட்டின்  அரசன்  அவரது மாணவன்தான். அவனிடம் மகனை அனுப்பினால்  ஏதாவது ஒரு அரசாங்க வேலை போட்டுத் தருவான்.  அப்புறம் அவன் வாழ்க்கை வறுமையில்லாமல் நகரும். மறுநாளே மகனை அழைத்து தனது எண்ணத்தைக் கூறினார்.  அவன் கையில் ஒரு சிறிய மூட்டையையும் கொடுத்து,
" மகனே!  இதை    அரசனிடம் காட்டு.  அவன்  உன்னை  அடையாளம் கண்டு கொள்வான். உனக்கு வேண்டியதெல்லாம்  செய்வான் " என்றார்.  மகனுக்கு  அவரது யோசனை பிடித்திருந்தது.  மறுநாள்  அவரிடம் ஆசி பெற்றுக்  கிளம்பினான்.  போகும் வழியில் , தந்தை கொடுத்த மூட்டையில்  என்ன  இருக்கும்  என்று பார்க்க  ஆசைப் பட்டான். 
" நிச்சயமாக ஏதேனும் விலை உயர்ந்த பொருளைத்தான் அப்பா ராஜாவுக்குப் பரிசாக  அனுப்பி இருப்பார் " . ஆர்வமாய்ப் பிரித்தவன் அதிர்ந்து போனான். 
விலை உயர்ந்த எதுவும்  அதில் இல்லை.  அதற்குள்  இருந்தவை எல்லாம் ஒரு சிவப்பு வர்ணம் பூசப்பட்ட  பிரம்பும் ,  அங்கங்கே  பெயர்ந்து  போயிருந்த  ஒரு மரத்தால் ஆன ஒரு வாளும்,  காவி நிறத்தில் இருக்கும் நைந்து போன  ஒரு பழைய வஸ்திரமும்தான்.  மகனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.  " சே!  இதைப் போய்  அப்பா  ராஜாவுக்குப் பரிசாக அனுப்பியிருக்கிறாரே! இது  எப்படி எனக்குப்  பெருமை சேர்க்கும்?  ராஜா மதிப்பாரா ? என்று குழம்பினான்.  அப்போது  அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.  அவனுக்கும்  ஏராளமான திறமைகள்  இருந்தன.  அவற்றைக் கொண்டு  ராஜாவின்  நன்மதிப்பைப் பெற முடியும் என்று  நம்பினான்.  அவன் ஒரு நல்ல ஓவியன்.  சிற்பியும் கூட. வழியில் கிடைத்த ஒரு சிறிய மரத்துண்டில் அந்த நாட்டின் சின்னமான புறாவைத் தத்ரூபமாக செதுக்கி எடுத்துக்  கொண்டான்.  காட்டில் கிடைத்த சருகுகளைக் கொண்டே  ஒரு அழகான வீட்டின் உருவத்தை உருவாக்கினான்.  ஒரே கூழாங்கல்லைக் குடைந்து  ஒரு சங்கிலியை உருவாக்கினான்.  அரண்மனை வாசலை அடைந்தான் .  அந்த ராஜா எந்தக் கலைஞனையும் எடுத்த  எடுப்பிலேயே அனுமதிப்பதில்லை.  அவர்களின்  திறமைக்கு சான்றான பொருட்களை முதலில் பார்த்து விட்டு ,  அவருக்கு விருப்பமானால் மட்டும்  அனுமதிப்பார்.
" ராஜா நிச்சயம்  என் திறமையில் மயங்கிப் போவார் " . சந்தோஷமாய் மரத்தில் செய்த புறாவை அனுப்பினான்.  அது திருப்பி அனுப்பப் பட்டது.  கொஞ்சம் சோர்வுடன் சருகாலான வீட்டை அனுப்பினான்.  அது சுக்கு நூறாகப் பிய்க்கப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டது.  கடைசியாய்க் கல்லில் செய்த சங்கிலியை  அனுப்பினான்.  இம்முறை கொஞ்சம் பணம் மட்டும் பரிசாக  அனுப்பப்பட்டது.  இனி என்ன செய்ய?  எப்படி அவரை சந்திக்க முடியும்? இனி வேறு வழியே இல்லை. கவலையோடு இருந்தவனுக்கு  ஒரு யோசனை தோன்றியது.  தந்தை கொடுத்த மூட்டையைக் காவலனிடம் கொடுத்தான்.  சற்று நேரம்  எதுவும் வரவில்லை.  ஆனால் ராஜாவே  விரைந்து வந்து அவனை  அணைத்துக்  கொண்டார்.  உள்ளே அழைத்துச் சென்றார்.  ராஜா கேட்டார்,
"  இதை முதலில் கொடுக்காமல்  ஏன்  எதையோ  அனுப்பினாய்" . அவனுக்கு  என்ன சொல்வதென்றே புரியவில்லை.  கண்களில் நீர் வழிய மொளனமாய் நின்றான்.  ராஜா சொன்னார்,
" இதோ இந்த பிரம்பு இருக்கிறதே ! இதை என் குரு  என்னை அடிக்க மட்டுமே பயன்படுத்துவார். இதன்  அடிக்கு பயந்தே பல நல்ல விஷயங்களை விரைவாய்க் கற்றேன். இந்த மரவாளைப்
பார்.  எதிரியின் தலைகளை பந்தாடும் என் கரங்கள்  இந்த வாளில்தான் பயிற்சி பெற்றன.  இந்தக் காவி வஸ்திரம் நான் ஒரு முறை புதை குழியில் சிக்கியபோது என் குரு  இதை வீசித்தான் என்னைக் காப்பாற்றினார். எனவே இம்மூன்றுமே எனக்கு விலைமதிப்பில்லாத  பொக்கிஷங்கள். இதை முதலிலேயே  கொடுத்து  அனுப்பி இருந்தால்  நீ எப்போதோ  உள்ளே வந்திருக்கலாமே ! தேவையற்ற விஷயங்களை  உன்  அடையாளமாகக் காட்டி  உன் நேரமல்லவா வீணாகிப் போனது? " என்று கடிந்து கொண்டார்.
கிறிஸ்துவையே நம்  அடையாளமாக நாம் காண்பிக்க வேண்டும்.  எத்தனையோ பேர் தமது அழியப்போகும்  படிப்பையும்,  காரையும்,  வசதி வாய்ப்புகளையுமே  தமது  அடையாளமாகக் காட்டிக் கொண்டு  ஏசப்பாவை  மறைத்து விடுகின்றனர்.  ஆனால் அவரை ஒளித்து வைக்கின்றவர் களுக்கும் ,  மறுதலிக்கின்றவர் களுக்கும் என்ன நேருமென்று அறிவாயா?
" நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக " 
கலாத்தியர் 6 :14

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*