பிறருக்கு பணம் கொடுத்தல்

பிறருக்கு பணம் கொடுப்பதில் ஞானம் வேண்டும்!
(இந்த பதிவை கவனமாக வாசிக்கவும்)
நம்மிடம் கடன் வாங்க விரும்புகிறவர்களுக்கு பணம் கொடுப்பதை பற்றி என்ன? நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, எங்கள் ஸ்தல சபையில் உள்ள ஒரு விசுவாசி என்னிடம் கடன் கேட்டார். நானோ “உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகம் கோணாதே” (மத்தேயு 5:42) என்ற வசனத்தை அறிந்தவன். அந்த சகோதரனும் அடுத்த மாதம் அந்தப் பணத்தை திரும்பித் தருவதாகக் கூறினார். எனவே நானும் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன். ஆனால் அடுத்த மாதம் அந்தப் பணத்தை அவரால் திரும்ப கொடுக்க முடியாமல் இன்னமும் அதிகமாய் கடன் கேட்டார். நானோ அதிகமான மாத சம்பளத்தை பெற்று, குடும்பம் ஏதும் இல்லாமல் எளிமையாய் வாழ்ந்தவன்! எனவே, கொடுப்பதற்கென ஏராளமான உபரிப்பணம் என்னிடம் இருந்தது. எனவே, இந்த முறையும் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன். மீண்டும் அடுத்த மாதமும் கேட்டார். அப்போதும் கொடுத்தேன்! சில மாதங்கள் கழித்து அந்த சகோதரன் பின்மாற்றம் அடைந்து, மது அருந்தி, பணத்தை வீணாக்கத் தொடங்கினார். இதை நான் கண்டபோது, அவரைப் பார்த்து, “பிசாசுக்கு உங்களால் பணம் கொடுக்க முடியுமென்றால் என்னிடம்பட்ட கடனை உடனே என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் அந்தப் பணத்தை ஆண்டவருக்கு திரும்பச் செலுத்த விரும்புகிறேன்” எனக் கூறினேன். அதற்கு அவர் என்னிடம் கடும் கோபம் கொண்டு, கடனுக்காக நான் அவரை இம்சிப்பதாகக் கூறினார். நானும் கடனை திரும்ப கொடுக்கும்படி கேட்பதை நிறுத்திவிட்டேன்.
இச்சமயத்தில் நான் ஆண்டவரிடத்தில் சென்று “நான் எந்த இடத்தில் தவறு செய்தேன்?” என்பதை விசாரித்தேன். அதற்கு ஆண்டவர் “அது உன் சொந்தப் பணத்தைப்போல் நடந்து கொண்டாய்! உண்மையில் அது என்னுடைய பணம். அவனுக்கு அதைக் கடனாகக் கொடுப்பதாக இருந்தாலும் அதைக்குறித்து நீ என்னிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்!” என பதில் கூறினார்.
யாரோ சிலர் 10,000 ரூபாயை என்னிடம் கொடுத்து “இதை பத்திரமாய் வைத்திருங்கள்” என கூறியதை நீங்கள் எப்படியோ அறிந்து, ‘அந்தப்பணத்தில்’ நீங்கள் என்னிடம் கடன் கேட்டால் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்? “இது என்னுடைய பணம் அல்ல. ஆகவே உங்களுக்கு கடன் கொடுப்பதற்கு முன்பாக பணத்திற்குச் சொந்தமானவரிடம் முதலாவது நான் கேட்டு வருகிறேன்!!” என்றே பதில் கூறியிருப்பேன். ஆனால், என்னுடைய விஷயத்திலோ நான் அவ்வாறு ஞானமாய் நடந்துகொள்ளவில்லை. ஏனெனில், “என்னுடைய பணம் அனைத்தும் ஆண்டவருக்கே சொந்தம்” என்பதை அறியாதவனாயிருந்தேன். இயேசு கட்டளையிட்டபடி, எனக்குள்ள யாவையும் நான் ஆண்டவரிடத்தில் விட்டு விட்டவனாயிருந்தால் (லூக்கா 14:33) என்னுடையவை யாவும் ஆண்டவருடையது என்பதை அறிந்தவனாய், இதிலிருந்து பணம் கேட்டவரிடம் “ஆண்டவரிடம் நான் ஆலோசனை கேட்க வேண்டும்” என்றும் கூறியிருந்திருப்பேன். ஆனால், அதற்குப் பதிலாக வேதவாக்கியத்திற்கு ‘எழுத்தின்படி’ ஓர் எந்திரம் போல் கீழ்ப்படிந்து கொஞ்சம் கர்த்தருடைய பணத்தை இழந்துவிட்டேன்! இயேசுவுக்குகூட ஒரு சமயம் சாத்தான் வசனத்தை கோடிட்டான். அவர் செய்தது போலவே நானும் வசனத்தோடு வசனம் ஒப்பிட்டு பார்த்திருக்க வேண்டும்!!
தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய நாம் எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஆகிலும், ‘அந்த ஒவ்வொரு தடவையும்’ நான் ஆண்டவரிடம் கேட்க வேண்டும்!! இவ்வாறு “அவருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கிறவர்களாகவே இருக்க வேண்டும்.” உண்மையான தேவையோடு இருக்கும் ஒருவரை நாம் சந்திக்கும்போது, நாம் கர்த்தரைத் தேடியிருந்தால் அவருக்கு பணத்தை கொடுக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற சாட்சியை நம்முடைய ஆவியில் பெற்றுவிடுவோம். உங்களிடம் உதவி கேட்கும் நபர் “ஒரு கெட்ட குமாரனாக இருந்து, பன்றிகள் மத்தியில் தேவனால் சிட்சிக்கப்படுகிறவராக” இருந்திருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் தரும் எந்த பண உதவியும், அவன் தன்னுடைய பிதாவின் வீட்டிற்கு மனந்திரும்பி வருவதற்குத் தடையாக இருக்குமேயல்லாமல் உதவி செய்வதாய் ஒருபோதும் இருக்காது!
இன்றோ நாம் ஓர் சட்ட திட்டங்களுக்கு உட்படும் நியாயப் பிரமாணத்திற்கு கீழ் இல்லாமல் பரிசுத்தாவியின் நடத்துதலுக்கு கீழ்ப்பட்டிருக்கிறபடியால், தேவனுக்கே நன்றி உண்டாவதாக! ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை இந்த பரிசுத்தாவியானவர் நேர்த்தியாகக் கூறி நம்மை நடத்துவார்!!

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*